Saturday, February 23, 2013

மருத்துவமனையும் அது சொல்லும் கதைகளும்!

டிப்ளமோ முடித்து விட்டு டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் சேர்ந்து, படித்தவற்றில் ஒன்று கூட நடைமுறை தொழிலுக்கு உதவாத கிலி பிடித்த நிலையில் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல், பரம ரகசியமாக தொழில் சூத்திரங்கள் அடைகாக்கப் பட்டு சாதிய ரீதியாய் இறுகி கிடக்கும் ஒரு குறுநகரத்தில், பலதும் வெறித்தனமாய் கற்று சுழன்று கொண்டிருந்த நேரம். காலையில் எட்டு மணிக்கு கிளம்பினால் அலுவலகம் முடிந்து ஓட்டை டி.வி.எஸ் பிஃப்டியில் கிளம்ப இரவு பதினொன்று,பனிரெண்டு ஆகிவிடும்.. ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஆறு, ஏழு மணிக்கு கிளம்பலாம்.. பத்து வருடங்களாக சீட்டை தேய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த சீனியர்களை விட அதிகம் தொழில்நேர்த்தி காட்டி பேரெடுக்க வேண்டும் என்ற பேராசையில் கண்ணில் பட்ட வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு நாயலைச்சல் அலைந்து கொண்டிருப்பேன்.. தொட்ட வேலையில் பாதி சொதப்பும்.. மேலாளரிடமிருந்து உலகத்தின் அனைத்து வசவுச் சொற்களையும் காதில் வாங்கி பெரும்பான்மை நேரங்களில் கண்ணோரத்தில் வழியும் நீருடன் தான் வீட்டுக்கு செல்வேன்.. ஆனால், என்னமோ செய்றாண்டா, எப்படியாவது ஷிப்மண்ட் வெளியெ அனுப்பிடறாண்டா என ஓரளவு பேரெடுத்திருந்தேன்.. அனைத்தும் எக்ஸ்போர்ட் ஆர்டர்கள்.. குறிப்பிட்ட தேதியில் கப்பலில் ஏற்றியாக வேண்டும் இல்லையெனில் ஏர் ஷிப்மண்ட் கம்பெனி கைக்காசில் அனுப்ப வேண்டும்..படு நட்டம்.. ஏர் ஷிப்மண்ட் ஆகக் கூடாது என்ற அச்சுறுத்தல் ஒவ்வொரு நொடியும் வருடம் முழுதும் பெரும் அழுத்தமாய் ஒவ்வொரு ஆர்டருக்கும் துரத்திக் கொண்டிருக்கும்..சராசரியாக வருடத்துக்கு 300-400 ஆர்டர்கள் என்வசம் இருக்கும். அந்த ஆர்டர்களின் ஆதி முதல் அந்தம் வரை எனக்கு மட்டுமே தெரியும்..கொஞ்சம் கொஞ்சமாய் மேலேறி ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்து அலுவலகத்தில் கொஞ்சம் ஆசுவாசப்பட ஒரு நான்கு வருடம் ஆனது..

அந்த நிலையில், அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட்..டூ வீலரில் போய்கொண்டிருந்தவரை அரசு பஸ் இடித்து கை உடைந்து விட்டது..எனக்குதான் போன் பண்ணினார். அடித்து பிடித்துப் போய் அவரை வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தேன்.. மருத்துவர் பரிசோதித்து விட்டு அறுவை சிகிச்சை செய்து தகடு வைக்க வேண்டும், ஐந்தாறு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்..எனக்கு விவரம் தெரிந்து அப்பாவுக்கு இருமல்,காய்ச்சல் கூட வந்ததில்லை.. மருத்துவமனை வாசமே அறியாதவர்..அங்கே அனுமதித்தவுடன் கொஞ்சம் கலங்கி விட்டார். அவரால் வலியும் தாங்க முடியவில்லை..அம்மா கொஞ்சம் எமோஷனல்..அப்பாவை மருத்துவமனை கட்டிலில் பார்த்தவுடன் ஒரே அழுகை..அம்மா இருந்தால் ஒத்து வராது என முடிவு செய்து அம்மாவை பேக்கப் பண்ணி வீட்டுக்கு போகச் சொல்லி விட்டு, தினமும் காலையில் ஒரு மணி நேரம் வந்து பார்த்தால் போதும் எனச் சொல்லிவிட்டேன்..நான்கைந்து நாள் விடுப்பெடுத்து அப்பாவுடனே மருத்துவமனையில் துணியிருந்தேன். அந்த நான்கைந்து நாட்கள் அந்த மருத்துவமனைச் சூழலும் அனுபவங்களும் முகத்திலறைந்து சொன்ன செய்திகள் பற்பல..கொஞ்சம் கூட வேறு நினைவே இல்லாமல் அலுவலே கதி என நான்கு வருடங்கள் அலைந்த எனக்கு அந்த நான்கு நாட்களில் கிடைத்த அனுபவங்கள் பெரும் திறப்பை ஏற்படுத்தின..என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்ன எனக்கு தேவை எனக்கு உணர்த்திய நாட்கள்.. கிட்டதட்ட 30-40 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனை அது..அந்த நாட்களில் அங்கு அனுமதிக்கப் பட்டிருந்த, வந்து சென்ற பார்வையாளர்கள் மூலம் கிடைத்த சித்திரங்களும்,அனுபவமும் அதற்கு முன் நான் நேரடியா உணராதவை.. கொதிப்பான பால் கொட்டி வயிறு முழுதும் பொசுங்கிய ஒரு வயது குழந்தை, ஒரு காலை கையில் பிடித்தபடி ஆம்புலன்ஸில் வந்திறங்கிய விபத்துக்குள்ளான புதுமாப்பிள்ளை என தினம் இரண்டு மூன்று பேர் வந்திறங்குவர்.. அந்த காட்சிகள் உணர்த்திய பல விசயங்கள் அதுவரை நான் அதுவரை அறியாதவை அல்லது அறிய முயற்சிக்காதவை..

அந்த நான்கு நாட்களுக்கு பின், அதுவரை இருந்த ஒரு கொதிநிலை மனநிலை ஒரு சமனத்துக்கு வந்தது..கொஞ்சம் நிதானமாக சுற்றியிருந்த உலகை பார்க்கவும், உணரவும், ரசிக்கவும் தொடங்கினேன்..நிற்காமல் இலக்கில்லாமல் ஓடிக் கொண்டேயிருந்த அந்த ஆரம்ப கட்ட நாட்களின் மடத்தனம் புரிய ஆரம்பித்தது.. இந்த காலகட்டத்துக்கு பின்தான் ஓரளவு நிறைய நேரம் வாசிப்பிற்க்கும் ஒதுக்க முடிந்து நிறைய படித்தேன்.. மருத்துவமனையில் இருந்து அப்பாவை டிஸ்சார்ஜ் செய்து ஒரு வாரம் கழிந்த பின் அலுவலகத்திலிருந்து வரும் வழியில், நியுசெஞ்சுரி புக் ஹவுசின் நடமாடும் புத்தகக் கடையை கண்டு நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதை தொகுப்பு வாங்கினேன்.. ஒரு சிறுகதையின் தலைப்பு ரொம்பவே பிடித்துப் போக அதை முதலில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் அன்றைக்கிருந்த மனநிலையில் ரொம்பநேரம் அப்படியே என்னை அமரவைத்த கதை அது. எல்லோருக்கும் ஒரு pause தேவைப்படுகிறது..அது நெருங்கியவர்களின் மரணம் அல்லது விபத்து எனும் போது சுயவிசாரணை அதன் உச்சத்தை அடைகிறது என்பது நிதர்சனம்.

அந்தக் கதை இங்கே.


http://azhiyasudargal.blogspot.in/2013/02/blog-post_23.html

2 comments:

Avargal Unmaigal said...

இன்றுதான் உங்கள் தளம் பார்த்தேன் & எழுத்துக்களை ரசித்தேன் அருமை

ராகின் said...

நன்றி! :)

Post a Comment